சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பிரிவியூ ஷோ: படத்தைப் பார்த்து ரசித்த சிம்பு

sharpana

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தின் பிரிவியூ ஷோவில் படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் நடிகர் சிம்பு.

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்திற்குப் பிறகு நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிக்கிலோனா'. இந்தப்படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்றும் காலத்தை கடந்து செல்லும் கதைக்களம் என்றும் சொல்லப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனைனா, ஷிரின் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். வரும், செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ’டிக்கிலோனா’ திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர் சந்தானத்தின் அழைப்பின் பேரில் நடிகர் சிம்பு நேற்று இரவு சத்யம் சினிமாவில் ‘டிக்கிலோனா’ படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்து ரசித்துள்ளார்.

அவருடன், நடிகர் யோகி பாபு, ஆர்யா, யுவன் ஷங்கர் ராஜா, வைபவ், விஷ்ணு விஷால் உள்ளிட்டோரும் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சந்தானம் முதன்முறையாக சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.