சினிமா

மாறி மாறி குற்றஞ்சாட்டும் சீரியல் பிரபலங்கள் அர்னவ்-திவ்யா.. நடந்தது என்ன? விரிவான தகவல்!

JananiGovindhan

சின்னத்திரை நடிகையான திவ்யாவை, சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள தன்னை மற்றொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ள அர்னவ் அடித்து காயப்படுத்திவிட்டதாக கூறி கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் திவ்யா சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற அவர், அர்னவ் அளித்த புகாரில் விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனிடையே தனது தரப்பில் உள்ள நியாயம் குறித்து அர்னவ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

இந்த நிலையில் திடீரென வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நண்பர்களுடன் மீண்டும் சிகிச்சைக்காக சென்ற திவ்யா சிகிச்சை பெற்று வெளியே வந்தபோது கண்ணீருடன் பேட்டி அளித்தார். அதில், தன்னை அர்னவ் முஸ்லிமாக கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடன் ஒரே வீட்டில் 45 நாட்கள் பேசாமல் இருந்தார். எனது செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டார்.

எனது உடல் நலம் சரியான உடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவேன். இது தொடர்பாக அர்னவின் பெற்றோர் கேட்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது. தற்போது மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றேன். குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர் என கண்ணீர் மல்க பேட்டி அளித்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, தனது மனைவியும் நடிகையுமான திவ்யாவை தான் தாக்கவில்லை என்றும் திவ்யாவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் அர்னவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்திருக்கிரார். அதில் தனது மனைவி திவ்யா அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துவதாக கூறியுள்ளார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா, நண்பர் ஈஸ்வர், இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மனைவி திவ்யாவிற்கும் எனக்கும் திருமணம் நடைபெற்ற அன்றுதான் அவளுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை பிறந்ததும் , விவாகரத்து ஆகியுள்ளதும் தெரியவந்தது. இதனை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் எனினும் காதல் காரணமாக இதனை ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் தன் மனைவியை தான் தாக்கியதாக கூறும் நேரத்தில் நான் அவருடன் வீட்டில் இல்லை எனவும் இதற்கான ஆதாரம் என்னிடம் இருப்பதாக கூறியவர், இதனை காவல்துறை கேட்கும்போது காண்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்வர் என்பவர் தனக்கு நன்மை செய்வதாக கூறி இதுபோன்று செயலில் ஈடுபடுகிறார். மேலும் தன்னை அடிக்கடி மிரட்டி வருகிறார் என தெரிவித்தார். நான் விவாகரத்து செய்துவிடுவேன் என எங்கும் கூறவில்லை. மனைவி திவ்யாவுடன் சேர்ந்து வாழ்வே விரும்புவதாகவும், அவர் கருவில் இருக்கும் குழந்தை எனக்கு பத்திரமாக வேண்டும் எனவும் அர்னவ் கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

 கர்நாடகாவைச் சேர்ந்தவரான நடிகை திவ்யாவுக்கு கடந்த 2012ம் ஆண்டு ஒருவருடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் விவாகரத்து பெற்று இருக்கிறார். இதன் பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடித்த போது அதே நாடகத்தில் கதாநாயனாக அர்னவ் நடித்திருக்கிறார்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து அர்னவின் கட்டாயத்தால் இந்துவாக இருந்த திவ்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறி இருக்கிறார். இதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் இந்து முறைப்படியும், இஸ்லாம் முறைப்படியும் அர்னவுடன் திவ்யா திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோக்கள் புகைப்படங்கள் எதையும் இணையதளத்தில் சமூக வலைதள பக்கங்களில் பகிர வேண்டாம் என அர்னவ் திவ்யாவை வற்புறுத்தி இருக்கிறார்.

இதே நேரத்தில் செல்லம்மா தொடரின் கதாநாயகியான அன்ஷித்தா என்பவர் உடன், அதே நாடகத்தில் கதாநாயகன் ஆக நடித்து வரும் அர்னவ் நெருக்கமாக இருந்து வந்ததாக திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் தனி வீடு எடுத்து தங்கியதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் பலமுறை ஃபோனில் அர்னவ் தனது முன்னிலையில் ஐ லவ் யூ கூறிக்கொண்டு அன்ஷித்தாவுக்கு முத்தம் கொடுத்ததாக கூறி கதறி அழுதார் திவ்யா.

இதனால், மனம் உடைந்த திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணமான வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை ஷேர் செய்திருக்கிறார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அர்னவ் உடனடியாக அந்த வீடியோவை நீக்கச்சொல்லி மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும், அதே நேரத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது ஒரு விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்பட வீடியோக்கள் எனவும் அர்னவ் கூறியதால், இதனை பார்த்த திவ்யா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் அது குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டாம் எனவும் அர்னவ் கூறி இருக்கிறாராம்.

அடுத்த கட்டமாக ஷூட்டிங் நடக்கும் இடங்களில் அன்ஷித்தாவும் அர்னவும் ஒன்றாக இருந்ததை பற்றி கேட்டபோது அன்ஷித்தா தண்ணீர் பாட்டிலை தூக்கி தன்னை அடித்ததாகவும் திவ்யா கூறியிருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய குழந்தை வயிற்றிலேயே செத்துப் போக வேண்டும் எனவும் சாபம் விட்டதாக கூறியிருக்கிறார். அன்ஷித்தா தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் உச்சமடைந்து போது திடீரென கீழே தள்ளி இருக்கிறார். மேலும் வயிற்றில் எட்டி உதைத்ததில் மயக்கம் அடைந்து வீட்டில் விழுந்ததாக திவ்யா கூறியுள்ளார்.