சினிமா

பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த ’செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா - ஆர்யன்

sharpana

’செம்பருத்தி’ சீரியல் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஷபானா திருமணம் இன்று நடைபெற்றது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘செம்பருத்தி’ சீரியலில் நாயகி பார்வதியாய் நடிப்பில்  கவனம் ஈர்த்தார் நடிகை ஷபானா. சீரியல் ஒளிபரப்பத் தொடங்கிய சில நாட்களிலேயே தமிழ் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை செய்தது ‘செம்பருத்தி’. வேலைக்கார அப்பாவி பெண் பார்வதியாய் நடித்த ஷபானாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆர்யனை இன்று பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலை உறுதி செய்தனர்.

இந்த நிலையில், இன்று எளிமையாக ஷபானா –ஆர்யன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷபானா வீடியோவும் புகைப்படங்களும் வெளியிட்டு, “நிறைய பேர் எப்போ கல்யாணம்னு கேட்டுட்டே இருந்தீங்க. இன்னைக்கு என் வாழ்க்கையில் ஒரு ஸ்பெஷலான நாள். சீரியல் முடிச்சிட்டு ஊருக்குப் போயிடலாம்னு இருந்தேன். ஆனால், கடவுள் முடிவு நான் சென்னையில்தான் செட்டில் ஆகணும்னு இருக்கு. இன்னைக்கு எனக்கு திருமணம். உங்கள் எல்லோருடையை ஆசிர்வாதங்களும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.