சினிமா

‘நானே வருவேன்’ பட அப்டேட் அளித்த செல்வராகவன் - விரைவில் முதல் சிங்கிள்?

சங்கீதா

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தின் இசை ஆல்பங்களுக்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றி படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இதனால், ‘நானே வருவேன்’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜாவுடன் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இசை ஆல்பத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.