சினிமா

ஆக்‌ஷன் த்ரில்லருக்கு மாறிய இயக்குநர் சீனு ராமசாமி: தேனியில் தொடங்கும் படப்பிடிப்பு

sharpana

இயக்குநர் சீனு ராமசாமி படங்கள் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ’சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களைச் சொல்லி நல்வழிப்படுத்தும் சிறந்த படங்களாக இருக்கும் . குடும்பப் படமாக இருக்கும். ஃபீல் குட் மூவி’ போன்றவைதான். அவரின் ’கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பறவை’,‘தர்மதுரை’உள்ளிட்டப் பல்வேறு படங்கள் சமூகக் கருத்துகளைப் பேசியிருந்தாலும், அவரின் ‘தர்மதுரை’ ஒரு படத்திலேயே வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும், திருநங்கைகளை சமமாக பாவித்தல், மருத்துவம் படித்தவர் ஆர்வமுடன் கிராமத்தில் பணிபுரிதல், பெண்ணின் உரிமைகள் என்று பல்வேறு சமூக சீரித்திருத்தக் கருத்துகளை காண்பித்திருப்பார். ’சீனு ராமசாமியின் படங்கள் மென்மையான படங்கள்தான், ஆனால், ஆழமான சமூக கருத்துக்களை கொண்டவை’ என்று மக்களால் பாராட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ள சீனு ராமசாமி, தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்திற்கு மாறியுள்ளார். இப்படத்தில், ஜி.வி பிரகாஷ் நடிக்கிறார். இதுகுறித்து, இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, ”ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன். இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது” என்று கூறியுள்ளார். இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.