சினிமா

'பத்மா‌வதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி!

webteam

நடிகை தீபிகா படுகோன் நடித்து வெளியாகவுள்ள பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜபுத்திர வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இந்தத் திரைப்படத்தை நாடு முழுவதும் திரையிட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட ‌பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநில பாரதிய ஜனதா தலைவர்களும் இந்தத் திரைப்படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைக் கோ‌ரி, எம்.எல். சர்மா என்பவர் உச்ச‌ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ‌அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தணிக்கைக் குழு இந்தத் திரைப்படம் குறித்து இறுதி முடிவை எடுக்காத நிலையில், ஏன் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்தனர். அத்துடன் உயர் பதவியில் உள்ளவர்கள் தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் நீதிபதிகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.