சினிமா

”வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள்”- நடிகர் மோகன்லால்

sharpana

“பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்” என்று வரதட்சணை கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.

கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது. கொல்லம் பகுதியில் ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த விஸ்மயாவை, அவரது கணவர் தொடர்ச்சியாக வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் மர்மமான முறையில் வீட்டில் இறந்துக்கிடந்த விஸ்மயாவின் மரணத்திற்கு, அவரது கணவர்தான் காரணம் என்று விஸ்மயாவின் தந்தை அளித்தப் புகாரின் அடிப்படையில் கால்வதுறை கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் கேரளா முழுக்க எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

இந்த நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில். ’பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு கொடுப்பதுதம் தவறு’ என்று அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆராட்டு’ படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு “வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்” என்று அழுத்தமுடன் வரதட்சணைக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.