கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை சப்தமி கௌடா. `காந்தாரா' முதல் பாகத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுக்க பிரபலமானார். இவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நடிகைகளை தவறான நோக்கங்களுக்காக மோசமான கோணங்களில் வீடியோ, போட்டோ எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "திரையுலகில் பெண்களாகிய நாம் அனைவரும் தொடர்ச்சியான பிரச்னையை அடையாளப்படுத்துவதில் ஒன்றிணைவோம். பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நடிகைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மோசமான கோணங்களில் படமாக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. தேவையற்ற ஜூம்கள் நம் உடலைக் காட்டுவதில் மட்டும் கவனமாக இருக்கின்றன.
ஒருசில தனி நபர்களின் நடத்தை, அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் எங்கள் பணியின் சார்பாக இங்கே இருக்கிறோம். எங்கள் சினிமாவுக்காக இங்கே இருக்கிறோம். வேண்டுமென்றே செய்யப்படும் ஜூம்-இன்கள் மற்றும் மோசமான கோணங்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். அவை கண்ணியத்தை மீறுவதாகும். மேலும், அவை சாதாரணமாக்கப்படவோ அல்லது பொறுத்துக்கொள்ளப்படவோ மாட்டாது.
நிகழ்வுகளைப் பதிவுசெய்ய வரும் செய்தியாளர்கள், தொழில்முறையையும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியத்தையும் பேண வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த எல்லையை நிர்ணயிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இதை அனுபவித்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம், மேலும் மரியாதை கோருவதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம். #actorsnotobjects" எனக் குறிப்பிட்டுள்ளார்.