சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன் ட்விட்டர்
சினிமா

’எஞ்சாயி எஞ்சாமி’ பாடல்: ‘ஒரு பைசாகூடக் கிடைக்கவில்லை’ - சந்தோஷ் நாராயணன் விளக்கம்!

Prakash J

’எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடல், உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு, தீ குரலில் வெளியான ஆல்பம் பாடலாக வெளியான இந்த பாடல், சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பெரும் வெற்றியும் பெற்றது. பின்னர், இந்தப் பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் அறிவு ஆகியோருக்கு இடையே பிரச்னையும் வெடித்தது.

இந்த நிலையில், இந்த பாடல் குறித்து சந்தோஷ நாராயணன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்ததே. இந்தப் பாடல் மூலம் எங்களுக்குக் கிடைத்த வருமானம் என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதுநாள் வரையில் இந்தப் பாடல் மூலம் ஒரு பைசாகூட, வருமானம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் எனது சொந்த ஸ்டுடியோவைத் துவங்க உள்ளேன். தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. இதில் கூடுதலாக எனது யூடியூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதைப் பொதுத் தளத்தில் சொல்ல விரும்பினேன். தனி இசைக்கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்’ என அதில் தெரிவித்துள்ளார்.