சினிமா

நான் நல்லவன் என்று சொல்லவில்லை: சிம்பு ஓபன் டாக்

webteam

சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிம்பு, நான் நல்லவன் என்று சொல்லவில்லை என தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தினால் தனக்கு 23 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சிம்பு நடித்து தருவதாக கூறியிருந்த இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க மறுப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் மைகல் ராயப்பன் குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்தப் புகார் குறித்து நடிகர் சிம்பு மறுப்பு எதுவும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் ’சக்கப் போடு போடு ராஜா’ இசை வெளிட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு ”என்னைப்பற்றி கடந்த சில நாட்களாக சில பிரச்சனைகள் பேசப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் பொய் என்று கூறமாட்டேன். என்னுடைய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் என் மீது தவறு இருந்தால் அதை பட ஷூட்டிங் போதே சொல்லியிருக்கலாம். அல்லது அந்தப் பட ஷூட்டிங் முடிந்த பிறகாவது சொல்லியிருக்கலாம். இல்லை படம் வெளியான உடனேயே சொல்லியிருக்கலாம். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு ஆறுமாதம் கழித்து அதை பற்றி தயாரிப்பாளர் பேசுவது வருத்தமாக இருக்கிறது. என் மீதும் தவறு உள்ளது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்தப் பிரச்னை பற்றி பேசுவதற்கு ஒரு வரைமுறை உள்ளது. அதற்காக நான் தப்பே செய்யவில்லை. நல்லவன் என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் செய்து வருவது சரியல்ல; நடந்த விஷயங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுப் பேசினார்.