சினிமா

`ஒன்லைன் கேட்டபோதே முடிவுப் பண்ணிட்டேன்’- தளபதி 67-ல் மிரட்ட வரும் சஞ்சய் தத்!

சங்கீதா

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று காலை தனி விமானத்தில், படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அங்கு நாளை முதல் நடைபெற உள்ளதாகவும், அங்கு துவங்கும் படப்பிடிப்பில் சஞ்சய் தத் உள்பட முக்கிய நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதனை உறுதிசெய்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்கி வரும் சஞ்சய் தத், ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் வில்லனாக அவரின் நடிப்பு மிரட்டலாக இருந்த நிலையில், தற்போது விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். படத்தின் ஒன்லைன் கேட்டபோதே, இந்தப் படத்தின் ஒரு பகுதியாக தானும் இருக்க வேண்டும் என்றும், அதற்கு சரியான தருணம் இதுதான் என்று தோன்றியதாகவும், ‘தளபதி 67’ பயணம் குறித்து மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளதாக போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் இருந்து காஷ்மீர் சென்ற படக்குழுவுடன் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் செல்வது போல் உள்ள புகைப்படங்கள் வெளியாகி மாஸ் கிளப்பிய நிலையல், தற்போது சஞ்சய் தத் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், அடுத்த 6 மணிநேரத்திற்கு ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் வந்துகொண்டிருக்கும் என்று, இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.