சினிமா

'விக்ரம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு - 'சாம்ராட் பிருத்விராஜ்' முதல் நாள் வசூல் மந்தம்

JustinDurai

அக்‌ஷய் குமாரின் 'சாம்ராட் பிருத்விராஜ்' முதல் நாள் வசூல் ரூ.11 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் பெரியளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் 'சாம்ராட் பிருத்விராஜ்'. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் நேற்று (ஜூன் 3) வெளியானது.

இந்தி பதிப்பைப் பொறுத்தவரை, ‘சாம்ராட் பிருத்விராஜ்’ இப்போதே லாபகரமான படமாக மாறியுள்ளது. ஆனால் தமிழ், தெலுங்கில் அந்தப் படத்திற்கு வரவேற்பு சுமாராகவே இருப்பதால், முதல் நாள் வசூல் மந்தமாக உள்ளது. இதனால் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்த படத்திற்கு போட்டியாக தமிழில் வெளியாகியுள்ள 'விக்ரம்' மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள 'மேஜர்' திரைப்படங்களுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ திரைப்படத்திற்கு அங்கு வரவேற்பு சுமாராகவே இருப்பதால், படம் நஷ்டமாகவே அதிக வாய்ப்புள்ளது. முதல் நாள் வசூல் ரூ.11 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் பெரியளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபகாலமாக தென்னிந்திய மொழிகளில் 'டப்' செய்யப்படும் இந்தி மொழி படங்கள் சாதாரண வருவாயை ஈட்டுவதற்கே பெரும்பாடு பட வேண்டிய நிலை இங்கு இருக்கிறது. அந்த நிலையை, 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படமும் சந்தித்து வருவதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்கலாம்: கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டு திகைப்பு - காரில் இருந்து இறங்க மறுத்த கே.கே