‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பங்கேற்க ஆவலாக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘நானும் ரவுடி தான்’. நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான அந்த திரைப்படத்திற்கு பின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார். படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்க உள்ளதாகவும் இயக்குநரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கவுள்ளதால் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பங்கேற்க ஆவலாக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் கதை சுவாரஸ்யமானது. நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கும், படப்பிடிப்பில் பங்கேற்க நான் ஆவலாக இருக்கிறேன். எனது கதாபாத்திரம் வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும்'' என தெரிவித்தார்.