நயன்தாராவுடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகை சமந்தா தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். ‘நானும் ரவுடிதான்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய்சேதுபதி இவரது படத்தில் நடிக்கிறார். மேலும், நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இந்தப் படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர்.
இதனிடையே நயன்தாராவுடன் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடியது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் பதிவேற்றி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்தப் பதிவில் விக்னேஷ் சிவன், “என் அழகான கதைக்கு இப்போது 5 வயதாகிறது. காத்துவாக்குல 5 வருடங்கள் அழகான தருணங்களால், அன்பின் சுமைகளால் நிரம்பியுள்ளன” எனக் கூறியிருந்தார். மேலும் அதில், “உங்கள் நிபந்தனையற்ற அன்பினாலும் பாசத்தாலும் தினமும் ஒரு காதலர் தினம்தான்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சமந்தா அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக சமந்தா தெரிவித்துள்ளார். படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும், அதற்கான படப்பிடிப்பைத் தொடங்க மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தன்னுடைய பங்கு படத்திற்கு வலுவாதனாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.