சினிமா

பிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி?

webteam

’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இருந்து பிரிட்டீஸ் நடிகை விலகியதால், படத்தின் கதையை இயக்குநர் ராஜமவுலி மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

'பாகுபலி' மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்ற, ராஜமவுலி அடுத்து இயக்கும் படத்தில் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்கள், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா  நடிக்கின்றனர்.


தற்காலிகமாக ’ஆர்ஆர்ஆர்’ (RRR )என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் கதை, சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டுள்ளது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையை எழுதியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். அவருக்குப் பதிலாக வேறு நடிகையை தேடி வந்தனர்.  யாரும் செட் ஆகவில்லை. 

இதனால் அந்த பிரிட்டீஸ் நடிகை கேரக்டரை நீக்கிவிட்டு, ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடி இல்லாமல் கதையை மாற்றி யுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி இருந்தால் முதன் முறையாக, ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோயின் இல்லாமல் நடிக்கும் படமாக இது இருக்கும் என்று டோலிவுட்டில் கூறுகின்றனர்.