சினிமா

‘ராக்கெட்ரி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு -நம்பி நாராயணன் குடும்பத்தினருடன் சக்சஸ் பார்ட்டி

சங்கீதா

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளப் படம் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’. மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எனினும், குற்றம் சுமத்தப்பட்ட காலக்கட்டத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். அப்போது அவர் சந்தித்த பிரச்சனைகளை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால், இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும், ஷாரூக்கானும் நடித்திருந்ததால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 40 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்துள்ளது. மேலும் இயக்குநராக தனது பணியை சிறப்பாக மாதவன் செய்ததாகவும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளநிலையில், இந்தப் படம் வருகிற 26-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நம்பி நாராயணின் குடும்பத்துடன், மாதவன் கேக் வெட்டி பட வெற்றியை கொண்டாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், “குடும்பம் முழுவதும் ஒன்று சேர்ந்து வெற்றியை கொண்டாடும்போது அது மகிழ்ச்சியாக மாறுகிறது. நம்பி சாரின் குடும்பத்தாரைப் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்தப் புகைப்படத்தின் உண்மையான அர்த்தம் விளங்கும். என்னைப் பொறுத்தவரையில் கடவுளின் அருளால், இலக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டது” இவ்வாறு உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.