கரூரில் நடந்த துயரச்சம்பவம் தனி மனிதனால் நடந்த தவறு கிடையாது என காந்தாரா பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தொடர்ந்து இந்த சம்பவம் பேசுபொருளாக இருந்துவருகிறது.
இந்தசூழலில் கரூர் துயரச் சம்பவம் குறித்து பேசியிருக்கும் நடிகர் ரிஷப் ஷெட்டி, அது ஒரு தனி மனிதனின் தவறு என சொல்லமுடியாது என தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள `காந்தாரா சேப்டர் 1' திரைப்படம் 6 நாட்களில் 427 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்தசூழலில் NDTV உடனான சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் ரிஷப் ஷெட்டி, கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் சார்ந்த கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ”ஒரு ஹீரோவையோ அல்லது அவரது கதாபாத்திரத்தையோ நாம் அதிகமாக விரும்பும்போதுதான், ஹீரோ வழிபாட்டைச் செய்கிறோம். முடிந்தவரை கதாநாயக வழிபாடுகளை தவிர்ப்பது நல்லது. நடந்த துயரம் பற்றி நான் எப்படி கருத்து தெரிவிக்கமுடியும். இப்படியான விபத்துகள் நிகழ்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, அங்கு சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் இது ஒரு தனி நபரின் தவறாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். இது ஒரு கூட்டு தவறாக இருக்கலாம், அதனால்தான் இதை ஒரு விபத்து என்று அழைக்கிறோம். இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை. இதை முடிந்தவரை நடக்காமல் தவிர்த்திருக்க வேண்டும். நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆனால் இந்தவிசயத்தில் நீங்கள் யாரை குற்றம் சொல்ல முடியும். கும்பலை யார் கட்டுப்படுத்துவார்கள்? நாம் காவல்துறையையோ அல்லது அரசாங்கத்தையோ எளிதில் குறை சொல்லிவிடலாம். அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது தான், ஆனால் சில நேரங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்களுக்கும் சிக்கல் இருக்கும்” என்று பேசியுள்ளார்.