நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடைகோரி, அப்படத்தின் இயக்குனர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார். இந்தப்படத்தை யு.ஆர்.ஜலீல் என்கிற உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கினார். இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக்கூறி, படத்தை வெளியிட தடைகோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “ கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறார். அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை.
இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமால் எனது உதவி இயக்குனரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் எனக்கு தெரியாமல் படத்தை எடிட் செய்து, பின்னணி குரல் பதிவு செய்து படத்தை வெளியிட முயற்சி நடைபெற்று வருகிறது. படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் தருவதாக கூறிய தயாரிப்பு நிறுவனம் தற்போது வரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளது. ஆகையால் மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் என் கதைக்கருவை வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக எனக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.என மனுவில் கோரியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுவுக்கு மே 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, எட்செட்ரா தயாரிப்பு நிறுவனத்துக்கும், உதவி இயக்குனர் அஞ்சு விஜய் மற்றும் படத் தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.