சினிமா

ராஜமெளலியுடன் மோதுவதை தவிர்க்க ‘இந்தியன்2’ படக்குழு முடிவு?

ராஜமெளலியுடன் மோதுவதை தவிர்க்க ‘இந்தியன்2’ படக்குழு முடிவு?

webteam

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி படத்துடன் மோதுவதை தவிர்க்க வேண்டி ‘இந்தியன்2’ பட வெளியீட்டை தள்ளிப்போட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

‘இந்தியன்’ படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டியதால் இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். ஆனால் நினைத்ததைப்போல படம் எடுப்பதில், சில தடைகள் இருந்தன. சில தாமதங்களுக்குப் பின்னால் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படம் தாமதமாக தொடங்கினாலும் ஆரம்பித்த நாளில் இருந்தே மிக வேகமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்பே முடிவடைய உள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி படத்தினை திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.

ஆனால் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.

இதனிடையே ‘இந்தியன்2’ படத்தினை பற்றி ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்தப் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதைவிட கோடை கொண்டாட்டத்தையொட்டி வெளியிடலாம் எனத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகப் பெரிய பொருள் செலவில் இதனை லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருவதால் அந்தத் தொகையை மீட்டு எடுக்க வேண்டும் என்பதில் அந்நிறுவனம் கவனமாக செயல்படுகிறது. எனவே ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்துடன் மோதுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளது.

மேலும் இந்திய சினிமாவின் இரண்டு பெரும் இயக்குநர்களான ஷங்கரும் ராஜமெளலியும் ஒரே சமயத்தில் மோதினால் அது பாக்ஸ்ஆபீஸ் வசூலுக்கு சவாலாக அமையும் என்பதால் இந்த யோசனையை கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படக்குழு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். மேலும் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். அனிருத் இதற்கு இசையமைத்து வருகிறார்.