சினிமா

பலியான தம்பியின் முகத்தை பார்க்காதது ஏன்? ரவிதேஜா விளக்கம்!

webteam

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் ஜூன் மாதம் 24-ம் தேதி கார் விபத்தில் பலியானார். இவரும் சில படங்களில் நடித்துள்ளார். இவரது இறுதி சடங்கில் இளைய சகோதரர் ரகு ராஜூ மட்டும் கலந்துகொண்டார். ரவிதேஜா உட்பட குடும்பத்தில் இருந்து வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. அந்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார் ரவி தேஜா. ஊரில் இருந்தும் இறுதி சடங்கில் ரவிதேஜா பங்கேற்காதது மீடியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இதுபற்றி வாய் திறக்காமல் இருந்த ரவிதேஜா இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

‘தம்பி பரத் இறந்து போனதை கேட்டதும் எங்கள் குடும்பம் தவித்துவிட்டது. எனது பெற்றோர் மொத்தமாக உடைந்துபோய் விட்டனர். எனது தம்பியின் புன்னகை முகம் மட்டுமே எங்கள் நினைவில் இருக்க வேண்டும் என்றுதான் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை. இதுதான் உண்மை. இது தெரியாமல் எங்கள் உணர்வுகளோடு விளையாடும் வகையில் சிலர் எழுதி வருவது வருத்தமளிக்கிறது’ என்றார் ரவிதேஜா.