சினிமா

ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம்: முடிவானது தேதி

JustinDurai

கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வரும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இம்மாதம் 14-ம் தேதி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் 2017-ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்த செய்தி கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்தது.  இருவரும் தங்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்காத நிலையில், ரன்பீரின் பாந்த்ரா இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் ஆலியா பட் - ரன்பீர் கபூரின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியாவின் உறவினர் ராபின் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி ஆலியா மற்றும் ரன்பீர் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. திருமண விழா மொத்தம் நான்கு நாட்கள் நடக்கவுள்ளது என்றும் ஏப்ரல் 13ம் தேதி மெஹந்தி விழாவுடன் தொடங்கும் என்றும் அந்த உறவினர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

பஞ்சாப் முறைப்படி நடக்கவிருக்கும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரண் ஜோஹர், ஷாருக்கான், சஞ்சய் லீலா பன்சாலி, அகன்ஷா ரஞ்சன், அனுஷ்கா ரஞ்சன், ரோஹித் தவான், வருண் தவான், ஜோயா அக்தர் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.