ramayana part 1 Prime Focus Studios/Monster Mind Creations/DNEG
சினிமா

’ராமரை பலவீனமா காட்டியிருக்காங்க..’ ரிலீசுக்கு முன் இதை செய்யவேண்டும்! ராமாயணா படத்திற்கு எச்சரிக்கை

ராமர் கதாபாத்திரம் பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராம்லீலா மகாசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rishan Vengai

‘ஆதிபுருஷ்’ அனுபவத்தை முன்னிறுத்தி, ராமாயணா படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருக்கலாம் என ஸ்ரீ ராம்லீலா மகாசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிலீசுக்கு முன் டெல்லி இந்து அமைப்புகளுக்கும் ராம்லீலா கமிட்டிகளுக்கும் சிறப்பு காட்சி காட்ட வேண்டும், இல்லையெனில் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என கடிதம் மூலம் தயாரிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்திருக்கும் ‘ராமாயணா: பகுதி 1’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மான், ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இந்த இதிகாச படத்தில் சன்னி தியோல், ப்ரியாமணி, ரவி துபே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 2026 தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.

ramayana part 1

ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே ராமாயணா திரைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் விசயமாக மாறியிருக்கிறது. ஒருபக்கம் ராவணன் கதாபாத்திரத்தை ஏற்றியிருக்கும் யஷ் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது என்று ஒரு சாரார் புகழ்ந்துவருகின்றனர். அதேநேரம் மற்றொரு சாரார் படத்தில் ஆடைத்தேர்வானது கதை நடக்கும் காலகட்டத்திற்கு பொறுத்தமில்லாமல் மிகவும் நவீனமாகத் தோன்றுவதாக விவாதித்து வருகின்றனர்.

ramayana part 1

இப்படி ராமாயணா படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே அப்படம் பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், படத்தில் ராமரின் கதாபாத்திரம் பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

ராமாயணா படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் இருக்கிறது என்ற தகவல் வந்திருப்பதாகவும், படத்தின் ரிலீசுக்கு முன்பு தங்களுக்கு படத்தை காண்பிக்க வேண்டும் என்றும், மீறினால் திரையரங்களுக்கு முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் ஸ்ரீ ராம்லீலா மகாசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலின் படி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஸ்ரீ ராம்லீலா மகாசங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ramayana part 1

அதில், ’சமீபத்தில், பிரபாஸ் நடித்த ஒரு திரைப்படம் வெளியானது, அதற்காக நாங்கள் செங்கோட்டையில் ஒரு விளம்பர நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தோம்.. இருப்பினும், அந்தத் திரைப்படத்தில் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் இருந்தது. உதாரணமாக, இலங்கையின் பொன் நகரம் கருப்பாகச் சித்தரிக்கப்பட்டது, தோல் பொருத்தமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டது, மேலும் சில கதாபாத்திரங்கள் முகலாய கால உருவங்களை ஒத்த அம்சங்களுடன் சித்தரிக்கப்பட்டிருந்தன.. எங்கள் பார்வையில், 'ஆதிபுருஷ்' ஒரு எதிர்மறையான பிம்பத்தையே முன்வைத்தது, அதனால்தான் அந்த பிரம்மாண்டத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

அதேபோல ராமாயணத் தழுவலாக சமீபத்தில் வெளியான ’ராமாயணா’ டிரெய்லர் எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை. ரன்பீர் கபூரின் ராமர் சித்தரிப்பு பலவீனமாகவும், அந்தக் கதாபாத்திரத்திற்கே உரிய கம்பீரம் இல்லாமலும் இருக்கிறது. எங்கள் கருத்துப்படி, அவர் ராமர் பாத்திரத்தை முழுமையாக ஒத்திருக்கவில்லை.. டெல்லியில் உள்ள இந்து அமைப்புகளுக்கும், ராம்லீலா கமிட்டிகளுக்கும் ரிலீசுக்கு முன்பு இப்படத்தின் ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்போது படத்தில் ஏதேனும் கவலைகள் எழுந்தால், தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஒருவேளை எங்களுக்கு காட்டாமல் திரைப்படம் சமய நூல்களைத் திரிப்பதாக இருந்தால் திரையரங்களுக்கு முன்பு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும்’ என்று எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.