ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ள படம் `பெத்தி'. ஜூன் 4ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பேசிய சிவராஜ் குமார், "ராம் சரணைத் துவக்கத்திலிருந்து பார்த்து வருகிறேன். அப்போது இருந்து மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அதனால்தான் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார். எல்லாம் அவரது தாய் தந்தை ஆசிர்வாதம். அவரது தந்தை வழிகாட்டுவது ஒரு விஷயம். என்னுடைய தம்பி புனீத்போலதான் ராம் சரணும் எனக்கு. அவருடன் நடிக்கச் சொல்லிக் கேட்டது பெரிய சந்தோஷமாக இருந்தது.
இந்த ’பெத்தி’ படத்துக்காக ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும். இங்கிருக்கும் அனைவருக்கும் ராமை தெரியும். சிரஞ்சீவியின் மீதும் பலருக்கும் அன்பு உண்டு. ஒரு முறை சிரஞ்சீவி பிறந்தநாளைக்கு இரத்த தான முகாம் நடந்தபோது நான் சென்று ரத்தம் கொடுத்திருக்கிறேன். எனக்கு சிரஞ்சீவியை மிகவும் பிடிக்கும், மொத்த குடும்பத்தையும் பிடிக்கும். ’பெத்தி’ பட வாய்ப்பு வந்தபோது உடனடியாக ராம்சரனுக்கு போன் செய்து ’நான் நடிக்கிறேன், அவ்வளவுதான்’ என்று கூறினேன். இது வெறும் ஸ்போர்ட்ஸ் படம் இல்லை. இதில் ஒரு எமோஷனும் இருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு எமோஷன் இருக்கிறது. மனுஷன் - விளையாட்டு இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. யாருக்காக விளையாடுகிறோம், எதற்காக விளையாடுகிறோம் என்பதுதான் இந்தப் படம். அந்த உணர்வு அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.