சினிமா

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை!

jagadeesh

சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டுள்ள நிலையில் , ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசும் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்களை தவிர, வேறு யாரும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தனது பெயரில் சமூக வலைதளங்களில் வெளியான கடிதம் குறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார்.