சினிமா

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

sharpana

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கடந்த ஆண்டு பிப்ரவரி வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.

தனது முதல் படத்திலேயே ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்திருந்தார் இயக்குநர் தேசிங். அடுத்தப் படம் எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் ரஜினிகாந்த். அதற்கடுத்ததாக, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெளியானபோது நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமியை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.