சினிமா

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு? - வெளியான மாஸ் தகவல்

சங்கீதா

நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளநிலையில், ஹைதராபாத்தில் செட் அமைக்கும் பணி தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ‘பீஸ்ட்’ படமும் கலவையான விமர்சனங்களைத் தாண்டி ட்ரோலுக்கு உள்ளானது. இந்த இரண்டுப் படங்களை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ், அடுத்ததாக இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ என்றப் படத்தை தயாரிக்க உள்ளது.

தொடர்ந்து வந்த விமர்சனங்களால், இந்தப் படம் வெற்றிப்படமாக அமைய படக்குழு, தயாரிப்பில் மிகுந்த மெனக்கெடல் காட்டி வருகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி பட குறித்த அறிவிப்பு வெளியாகியும், இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. ‘பீஸ்ட்’ மீதான விமர்சனத்தால் இயக்குநர் நெல்சன் கதையில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் 10-ம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதாராபாத்தில் இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவ ராஜ்குமார் வில்லனாக நடிக்கவுள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் நடிக்கவுள்ளனர். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.