சினிமா

’பார்த்த விழி பார்த்தபடி’ படக்குழுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

webteam

கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ’பார்த்த விழி பார்த்தபடி’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், ‘பார்த்த விழி பார்த்தபடி’. கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில், சாந்தி கிருஷ்ணா, சுதா மகேந்திரன், மதுவந்தி, புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் உட்பட பலர் நடித்துள்ளனர். சேது இயாள் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மறைந்த தட்சிணாமூர்த்தி இசை அமைத்துள்ளார். இவர், இளையராஜா, யேசுதாஸ் ஆகியோரின் இசை குரு. இந்நிலையில், இந்தப் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார். 

மலையாளத்தில் ’ஷியாம ராகம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் சிறப்பு காட்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் ஞாயிற்றுக் கிழமை திரையிடப்பட்டது. இதை நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் வந்து பார்த்தார். பின்னர், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் உட்பட படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டினார்.