சினிமா

"அந்தக் காட்சிக்காக ரஜினி தினமும் உடற்பயிற்சி செய்தார்"-இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் !

jagadeesh

படையப்பாவில் வரும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்காக ரஜினி தினமும் உடற்பயிற்சி செய்தார் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தன் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினியுடன் "முத்து", "படையப்பா" போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழுக்கு தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர் "படையப்பாவில் பல ஆண்டுகள் கழித்து ரம்யா கிருஷ்ணனும் ரஜினியும் சந்திக்கும் காட்சியில் ஊஞ்சலை இழுக்கும் காட்சி ஸ்பாட்டில் தோன்றியதுதான். அது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டில் இல்லை" என்றார்.

மேலும் "அப்போது அந்த இடத்தில் தோன்றிய காட்சியை ரஜினிக்கு விளக்கினேன். அவர் மறுப்பு ஏதும் கூறாமல் நடித்துக்கொடுத்தார். அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்யக் கூடிய நடிகர். மிகப்பெரிய நடிகர் என்பதால் ஆட்சேபம் எல்லாம் தெரிவிக்க மாட்டார், அமைதியாக இருப்பார் எப்போதும். படையப்பா படத்துக்காக அது தொடர்பான விஷயங்கள் பேசுவதற்கு அடிக்கடி அவருடைய வீட்டுக்கு செல்வேன். அப்போது ஒருநாள் மேல் உடம்பில் டவலுடன் உட்கார்ந்திருந்தார்" என்றார் ரவிக்குமார்.

தொடர்ந்து பேசிய அவர் "அப்போது அவரிடம் என்ன சார் கட்ஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு என்றேன். அதற்கு அவர் ஆமாம் ஷூட்டிங் போகனும்ல என கூறினார். அப்போது என்னிடம் 1000 முறை ஸ்கிப்பிங், டம்பல்ஸ், ஆர்ம்ஸ்க்கு தேவையான உடற்பயிற்சியை தான் மேற்கொண்டு வருவதாக சொன்னார். அப்போது நான் இந்த வெற்று உடம்பை அப்படியே கிளைமேக்ஸ்ல வெச்சுக்கலாம் என கூறினேன். பொதுவாக உடற்பயிற்சி கருவியை படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினி சார் கொண்டு வரமாட்டார். ஆனால் கிளைமேக்ஸ் காட்சியை சொன்னப் பின்பு உடற்பயிற்சி கருவிகளை படப்பிடிப்புதளத்துக்கு கொண்டு வர ஆரம்பித்தார்" என்றார் ரவிக்குமார்.

இறுதியாக பேசிய ரவிக்குமார் "எப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ரஜினி சார் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனிடம் சொன்னேன். பின்புதான் படையப்பா கிளைமேக்ஸ் காட்சியில் சட்டை கிழிய கட்டுமஸ்தான உடல் தெரியும்படி சண்டைக் காட்சியை வைத்தோம். அந்தக் காட்சி அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியையும் கொடுத்தது" என்றார்.