பாரதிராஜா - ரஜினி pt
சினிமா

’என் நடிப்பு அவருக்கு பிடிக்காது..’ பாரதிராஜா மறைவு குறித்து ரஜினி பேச்சு!

இயக்குநர் இமயம் என போற்றப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவால் 84வது வயதில் காலமானார்.

Rishan Vengai

உடல்நலக்குறைவால் மரணமடைந்த பாரதிராஜா உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் நிலையில், ரஜினிகாந்தும் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். ஸ்டுடியோ சினிமாவை கிராமத்துக்கு கொண்டு சென்று, கதாநாயகனின் வரையறையை மாற்றிய பாரதிராஜா, இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் எனவும், அவரின் மறைவு நிரப்ப முடியாத இழப்பு எனவும் ரஜினி கூறினார்.

தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய தாக்கம் சாதாரணமானது கிடையாது. ஸ்டுடியோவுக்குள் உழன்ற சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். கதாநாயகனுக்கான வரையறைகளை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி வெத்தலை சொத்தப்பும் சப்பாணியாக மாற்றிக் காட்டியவர்.

பாரதிராஜா

தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்.... அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவருடைய உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் அஞ்சலி செலுத்தினார். அப்போது பாரதிராஜா குறித்து பேசிய ரஜினி, “பல நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் பாரதிராஜா. திரையுலகில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுத்தது பாரதிராஜாதான். குழந்தை போன்றவர் பாரதிராஜா, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் என் நடிப்பை பிடிக்காது என வெளிப்படையாக கூறுவார்” என பேசியுள்ளார்.

மேலும், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவருடைய பெயரை மறக்க மாட்டார்கள். அவருடைய பெயர் என்றென்றைக்கும் தமிழ் மக்கள் இதயத்தில் இருக்கும். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி, மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லிவிடுவார். என்னைப் பற்றி அவர் நிறைய விமர்சனங்கள் வைத்திருக்கிறார். ரஜினி உன்னை எனக்கு பிடிக்கும் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று சொல்வார். அவருடன் இருந்தால் மிக மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கும். அவர்போல வெளிப்படையாக பேசும் நபரே கிடையாது. அதனால் தான் எம் ஜி ஆர், கலைஞர், சிவாஜி என பலருடன் நட்பில் இருந்தார்.

அவர் சில காலமாக உடல்நலம் சரியாக இல்லை, திடீரென இந்த மறைவு ஏற்பட்டுள்ளது. அவர் உயிருடன் இருக்கும் போதே வந்து பார்த்திருக்க வேண்டும், சீக்கிரம் சரியாகிவிடுவார் அப்போது வாருங்கள் என சொன்னார்கள். அவரை கடைசி காலத்தில் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது. அவர் என்றென்றும் என்னுடைய நினைவுகளில் இருப்பார்." என்றார்.