இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்குக் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்த விழா நடப்பதாக இருந்தது. இலங்கை பயணத்தை ரஜினி தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றினை ரஜினி வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், லைக்கா நிறுவனம் இலங்கை வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக 150 வீடுகளை கட்டியுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த அந்த விழாவில் மலேசிய செனட் உறுப்பினர். விக்கேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், இங்கிலாந்து எம்.பி. ஜேம்ஸ் பெர்ரி, இலங்கை வடக்கு மாகாண முதலைமைச்சர் விக்னேஷ்வரன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை கொடுப்பதுடன், யாழ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்பணிக்காக நன்கொடை அளிக்கவும் திட்டம்.
மறுநாளான ஏப்ரல் 10ல் வவுனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து, மரக்கன்று நடும் திட்டம். அதன்பிறகு முல்லைத்தீவு, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களைப் பார்வையிட்டு மக்களை சந்திப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் இரண்டு விஷயங்களுக்காக இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்தேன். காரியம்; அந்த வீடுகளைத் திறந்துவைப்பது. காரணம்; காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுயகௌரவத்திற்காக, லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுயசமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்துகிடைக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களை பார்த்து, அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை வெகுநாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களைப் பார்க்க வேண்டும். மனம் திறந்து பேசவேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். அதுமட்டுமின்றி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து, வேறு எந்த தொழிலும் தெரியாததனால், கடலில் போய் மீன்பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களுடைய உயிரைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைக்கும் சம்பவங்களை அன்றாட பத்திரிகைகளில் படிக்கும் போது நெஞ்சம் துடிக்கிறது. அதைப்பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வுகாண வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்.
இந்த தருணத்தில் எனது அருமை நண்பர் திருமாவளவன் ஊடகங்கள் மூலமாகவும், வைகோ தொலைபேசி வாயிலாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டனர். அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.
இச்சமயத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல; ஒரு கலைஞன். அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பதுதான் என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியைக் காணும் பாக்கியம் கிடைத்தால், தயவுசெய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். ரஜினிகாந்த் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.