சினிமா

''ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது இப்போதுதான் எனக்கே தெரியும்'' - சகோதரர் சத்ய நாராயணா

webteam

ரஜினி கட்சி தொடங்கவில்லை என்ற செய்தி தனக்கே தற்போதுதான் தெரியும் என அவரது சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்

வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ரஜினியின் அறிவிப்பு குறித்து அவரது சகோதரர் சத்ய நாராயணா புதிய தலைமுறைக்கு பேசினார். அதில், ’’ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வருவார். எதையாவது செய்வார் என எதிர்பார்த்தார்கள். ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பை தொண்டர்கள் மறப்பது கஷ்டம். ரஜினி கட்சி தொடங்கப்போவது குறித்தெல்லாம் என்னிடம் பேசினார். தற்போது மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று இப்படி முடிவெடுத்துள்ளார். கட்சி தொடங்கவில்லை என்ற செய்தி எனக்கே இப்போது தான் தெரியும். பரவாயில்லை. அவரது முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.