சினிமா

“'தலைவன் இருக்கிறான்' படத்தில் நடிக்க கமல் என்னை அழைத்தார்” - லாரன்ஸ்

webteam

‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க தன்னை கமல்ஹாசன் அணுகியதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக கடந்த மாதம் சென்னையில் தனியார் தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் விழா ஒன்று நடந்தது. அதில், ரஜினி காந்த் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தி பேசினர். அந்த நிகழ்ச்சியில் வடிவேலு ‘தேவர் மகன்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பேசிய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. 

விழாவில் இறுதியாக பேசிய கமல், அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அதிக படங்களில் இனி நடிக்க முடியாது என்றும் ஆனாலும் ராஜ்கமல் நிறுவனம் தரமான மரங்களை தொடர்ந்து வழங்கும் என்றும் பேசியிருந்தார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு சில காரணங்களால் நின்று போன ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அந்தச் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனியையே, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரஜினிகாந்தின் ‘தர்பார்’ஆடியோ வெளியீட்டின் போது கமல்ஹாசன் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ்  பேசிய கருத்துக்கள் சர்ச்சையை சந்தித்தன. அதன் பின்னர், லாரன்ஸ் சமூக ஊடகங்களில் சர்ச்சையான தனது கருத்துக்கள் குறித்து விளக்கங்களை அளித்தார். தான் கமல்ஹாசனை எவ்வளவு மதிக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள தான் பேசிய முழு பேச்சையும் பார்க்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், இப்போது, கமல்ஹாசன் குறித்து தனது பழைய கால நினைவு ஒன்றை ​​ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், கமல்ஹாசன் தன்னை ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் இணைந்து நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அப்போது தனது ‘கால பைரவா’ படத்தில் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ் இவ்வாறு பேசினார். லாரன்ஸ் இப்போது தனது ‘காஞ்சனா’ பட இந்தி ரீமேக்கில் பிசியாக இருக்கிறார். இந்தப் படத்திற்கு இந்தியின் ‘லட்சுமி பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தி ரீமேக் ஆகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை லாரன்ஸே இயக்கி வருகிறார். இதன்மூலம் இந்தியில் இயக்குனராக இவர் அறிமுகமாக உள்ளார்.