சினிமா

உயிரிழந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்

sharpana

உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் படிப்புச் செலவினை நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ’ரேணிகுண்டா’ , ’கண்ணே கலைமானே’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் மதுரையைச் சேர்ந்த தீப்பெட்டி கணேசன். இவர் உடல் நலக்குறைவால் இன்று காலை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உயிரிழந்த தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை ஏற்றுக்கொண்டு உதவிகளை செய்தேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற அளவிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.