சினிமா

நடிகர் பிரபாஸின் `ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

கொரோனாவால் தள்ளிப்போன யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸின் பான் இந்தியா திரைப்படமான ’ராதே ஷ்யாம்’ படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.

70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 'ராதே ஷ்யாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷ்யாம்' திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாக உள்ளது. கடந்த வருடமே (2020-ல்) வெளியாகியிருந்திருக்க வேண்டிய இத்திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஜனவரி 2022-ல் பொங்கல் ரிலீஸூக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தை வெளியிடவும் படக்குழு முயன்றது. ஆனால் அதுவும் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ராதே ஷ்யாம் திரைப்படம், மார்ச் 11ம் தேதி பிரமாண்டமாக தியேட்டர்களில் வெளியாகயுள்ளது. ‘காதலுக்கும் விதிக்கும் இடையிலான மிகப்பெரிய போரை திரையரங்கில் 11.03.2022 முதல் உலகெங்கும் காணலாம்’ என்ற அறிவிப்புடன் இச்செய்தி வெளியாகி உள்ளது.