சினிமா

ஊரடங்கில் 80% உயர்ந்த பி.வி.ஆர், ஐநாக்ஸ் பங்குகள்!!

ஊரடங்கில் 80% உயர்ந்த பி.வி.ஆர், ஐநாக்ஸ் பங்குகள்!!

webteam

தியேட்டர்கள் மூடப்பட்ட போதிலும் பி.வி.ஆர், ஐநாக்ஸ் பங்குகள் மூன்று மாதங்களில் 80% உயர்ந்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. என்றாலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள திரையரங்குகளும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. 150 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே சினிமாத் தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களாக ஊரடங்கினால் பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக இழப்புகளை சந்தித்து வருகின்றன. இத்தகைய காலகட்டங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய மல்டிபிளக்ஸ் ஆபரேட்டர்களான பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் லீஷர் ஆகியவற்றின் பங்குகள் குறைந்த பட்சம் 80 சதவிகிதம் உயர்ந்துள்ளன.