சினிமா

பழங்குடியின மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக விளக்கும் 'புதர்': படக்குழு சொல்வது என்ன?

JananiGovindhan

அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ‘சென்டினல்’ மக்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் புதர்.

ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

டாக்டர் அகஸ்டின் இயக்கத்தில், சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு பெண் இசையமைப்பாளர் மேரி ஜெனிதா முதல் முறையாக 4 மொழிகளில் இசையமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடை பெற்றது. விழாவில், ஆர்.பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ், சீனு ராமசாமி , ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

பழங்குடியினரைச் சேர்ந்த கோக்ரி (கோபாலகிருஷ்ணன்) என்பவர் வித்தியாசமான கதைகளம் கொண்ட இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தமிழ் மற்றும் மலையாள திரைத் துறையில் இருந்தும் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் கேரளா மற்றும் கர்நாடக எல்லைக்கு அப்பால் உள்ள குருபா தீவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் பழங்குடியினர் பேசும் மொழி தனித்துவமானது மற்றும் வித்தியாசமானது. இந்த மொழிக்கான எழுத்துக்கள் அங்கு இல்லை.

இந்த படத்தில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை, மொழி ஆகியவை 70 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், பழங்குடியினரின் இயல்பான மற்றும் பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத்துவது என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தமானில் உள்ள சென்டிபல் தீவில் வாழும் மக்களின் ஒற்றுமையை கொண்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.