சினிமா

”‘புஷ்பா’ என் இசை பயணத்தில் மறக்க முடியாத படம்” - தேவிஸ்ரீ பிரசாத்

sharpana

புஷ்பா’ படத்தின் ’ஸ்ரீவள்ளி’ பாடல் வைரல் ஹிட் அடித்துள்ளதால் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

இத்தனை வசூலுக்கும் வெற்றிக்கும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசைதான். ‘ஊ சொல்றியா’, ‘சாமி சாமி’, என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக, ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளியூர் ஆட்டக்காரர்கள் வரை இன்ஸ்டா ரீல்ஸில் நடனமாடி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா எங்கும் ட்ரெண்டிங் ஆகியுள்ள ஸ்ரீவள்ளி பாடல் குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசும்போது,

“புஷ்பா – தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்பட இசையில் எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார் சார், ஐகான்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக அன்பையும் ஆசிர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி, எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன்” என்றார்.