சினிமா

திரைக்கு முன்னே நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகும் ’புலிக்குத்தி பாண்டி’!

sharpana

முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ஓடிடி, தியேட்டர்களுக்கு வராமலேயே தனியார் தொலைக்காட்சியில் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

விக்ரம் பிரபு தமிழில் முதன் முறையாக பிரபு சாலமன் இயக்கத்தில் ’கும்கி’ படத்தில்தான் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் பழங்குடியினப் பெண் கெட்டப்பில் நடிப்பில் ஈர்த்திருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஏற்கனவே, 2013 ஆம் ஆண்டு வெளியான முத்தையாவின் முதல் படமான ’குட்டிப்புலி’ படத்தில் சசிகுமாருக்கு லட்சுமி மேனன் தான் ஹீரோயினாக நடித்தார். அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு வெளியான ’கொம்பன்’ படத்தில் கார்த்தி ஜோடியாக முத்தையா இயக்கத்திலேயே நடித்திருந்தார். தற்போது,  முத்தையா  இயக்கியுள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்திலும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக லஷ்மி மேனன் இணைந்துள்ளார்.

இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பொங்கலையொட்டி டிவியில் இப்படத்தை வெளியிடுகிறது. அதன்பிறகு, அதன் ஓடிடி தளத்திலும் வெளியிடுகிறது. பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர், ஈஸ்வரன், பூமி படங்களை அடுத்து தற்போது ‘புலிக்குத்தி பாண்டி’ படமும் இணைந்துள்ளது.