சினிமா

”தனியாவும் இருக்கணும்.. சேர்ந்து இருந்தா..” PS-2க்காக ரீவைண்ட் பதிவிட்டு அசத்திய படக்குழு!

JananiGovindhan

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாக திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அதன் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

அதன் அடுத்த பாகம் எதிர்வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருக்கிறது. இதனையடுத்து பொன்னியன் செல்வன் - 2க்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றிபெற்றதற்கு இசை வெளியீட்டு விழாவில் கமல், ரஜினி பேசியதும், அதன் பிறகு விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் என அனைவரும் ஒவ்வொரு நகரங்களாக பறந்துச் சென்று தீவிரமான புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டதும் மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

அந்த வகையில் இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதிலிருந்தே புரோமோஷன் வேலைகளை படக்குழு துரிதப்படுத்தியிருக்கிறது. முதற்கட்டமாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது பொன்னியின் செல்வன் படக்குழு.

அதன்படி, PS-2 வெளிவரும் நிலையில் PS-1 பற்றிய ரீவைண்ட் பயணத்துக்கு செல்வோம் எனக் குறிப்பிட்டு புரோமோ வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், அருண்மொழி வர்மனும், கரிகாலரும் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாப்பாத்திரத்தின் வசனத்தோடு தொடங்கும் அந்த வீடியோ இறுதியில் முதல் பாகம் பார்க்காதவர்களும் இரண்டாம் பாகம்
புரிய வேண்டும் என மணிரத்னம் சிலாகித்து சொல்வதோடு முடிகிறது புரோமோ.

இதனைக் கண்ட ரசிகர்களும், இணைய வாசிகளும் மிகுந்த ஆவலோடு பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். மேலும் முதல் பாகத்தின் பின்னணி இசைக் கோர்வையை விரைவில் வெளியிடுமாறும் ரசிகர்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.