சினிமா

'ஜெய் பீம்’ படம் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது: தாணு

sharpana

”’ஜெய் பீம்’ படம் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது” என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்து முதல் தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஏற்கனவே, இப்படத்தினை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சினிமாத்துறையினரும் பாராட்டிய நிலையில், தற்போது ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்ததற்காகவும் திரைத்துறையினர் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், தயாரிப்பாளர் தாணு “’ஜெய் பீம்’ தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. படக்குழுனருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கும் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தினை தாணுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தில் வழக்கறிஞராக நடித்து கவனம் ஈர்த்தார் நடிகர் சூர்யா. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது பழங்குடியின மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே ‘ஜெய் பீம்’ படமாக கற்பனையோடு உருவாக்கினார் இயக்குநர் ஞானவேல். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுக்க பாராட்டுகளைக் குவித்தது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் இந்தியளவில் முதலிடம் பிடித்ததோடு ஐஎம்டிபி இணையதளத்திலும் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும் ‘ஜெய் பீம்’ உள்ளது. இந்த நிலையில், ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் 12 நிமிட காட்சிகளும் இயக்குநர் ஞானவேல் படம் குறித்து பேசுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் ‘ஜெய் பீம்’ என்பது குறிப்பிடத்தக்கது.