சினிமா

முகத்தில் காயங்களுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம் - குழப்பமான ரசிகர்கள்

சங்கீதா

முகத்தில் காயங்களுடன் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பமடைந்தநிலையில், அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல இந்திய நடிகையுமான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் வசித்து வருவதுடன் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி, கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பெண் குழந்தை பெற்றடுத்ததாக சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில், திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். எனினும், மருத்துவமனையில் 100 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியங்காவின் பெண் குழந்தை, கடந்த 8-ம் தேதி அன்னையர் தினத்தன்று வீடு திரும்பியது.

இதையடுத்து, பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி, தங்களது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, இந்த 100 நாட்கள் எவ்வாறு தாங்கள் மன வலியை அனுபவித்தோம் என உருக்கமாக பதிவிட்டதுடன், தங்களது குழந்தையை கவனித்துக்கொண்ட மருத்துவர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும், குழந்தை உடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும், எவ்வளவு விலைமதிப்பற்றது என தெளிவாக தெரிகிறது என்று பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தனது குழந்தை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே, படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டுள்ளார். ‘சைட்டடல்’ என்ற சயின்ஸ் பிக்ஷன் அமெரிக்க தொலைக்காட்சி தொடரை, பிரபல நடிகரான ரிச்சர்டு மேடன் உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா தயாரித்து வருகிறார்.

இவர்கள் இருவருமே இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அமேசான் பிரைமில் வெளியாக உள்ள இந்த தொடரை, ரூசோ சகோதரர்கள் இயக்கி வருகின்றனர். இந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும்நிலையில், இதில் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளில் பிரியங்கா சோப்ரா நடிக்கும் காட்சியைத் தான், தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, உங்கள் வேலை நாட்களில் கடினமான நாட்கள் இருந்துள்ளதா? என கேப்ஷனுடன் குறிப்பிட்டுள்ளார்.

முகத்தில் காயங்களுடன் இருந்ததை அடுத்து, பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் குழப்பமான நிலையில், உண்மையில் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர். மேலும், ‘சைட்டடல்’ தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்தது என தெரிந்ததும் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். தனது சினிமா வேலையை அதிகளவில் விரும்பும் பிரியங்கா சோப்ரா, குழந்தை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.