சினிமா

நடிகர் சிவாஜியின் மகள்கள் சொத்தில் பங்கு கேட்டு தொடுத்த வழக்கு - விசாரணை தள்ளிவைப்பு

webteam

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் சொத்துக்களை தங்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்க உத்தரவிடக்கோரியும் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தங்களுடைய சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் தங்களுக்கு உரிமையுள்ள சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அதனால் பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை சாந்தி தியேட்டர் சொத்துக்களை விற்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.

இந்த கூடுதல் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து சொத்துக்களிலும் தங்களுக்கு சமபங்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்‍ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள்  ராம்குமார், பிரபு இருவரும் ஈடுபடுகிறார்கள். அதனால் பிரதான வழக்கின் விசாரனையின் முடிவு தெரியும்வரை இது தொடர்பான சொத்துக்களின் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில் சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்துவிட்டது எனவும், ஆனாலும் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஸ் பாரசுரன் ஆஜராகினார். அப்போது சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ஆம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், அதன்பேரில் தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களது குடும்ப பிரச்னை காரணமாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்றும், இந்த வழக்கால் குடியிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

கூடுதல் மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.