சினிமா

தஞ்சையில் ரசிகர்களை சந்திக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு - ட்விட்டரில் பெயர் மாற்றம்

சங்கீதா

‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அதில் நடித்த நடிகர்கள் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளனர்.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதேப் பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமம் மட்டுமே 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், படத்திற்கு இன்னும் 15 தினங்களே இருப்பதால் படக்குழுவினர் பட விளம்பரத்தை துவங்கியுள்ளனர். அதன்படி தஞ்சையில், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களது ட்விட்டர் பக்கங்களில், தங்களது பெயர்களை அவர்கள் மாற்றியுள்ளனர். அத்துடன் தஞ்சை செல்வதையும் அதில் உறுதிப்படுத்தியுள்ளனர்.