சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் - வெளியான அப்டேட்

சங்கீதா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கல்கியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி,  நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையத்துள்ளார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 9-வது முறையாக தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், வருகிற ஜூலை 31-ம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பாடல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. பொன்னி நதி என்று பெயரிடப்பட்டு, போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்து, சோழர்களின் உலகில் இசைப் பயணத்தைத் தொடங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.