சினிமா

பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புக்கு காவல் நீட்டிப்பு

webteam

நடிகை பாவனா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் போலீஸ் காவல் நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை திலீப்பின் ஜாமீன் மனு விசாரணைக்கு‌ எடுத்துக்கொள்ளப்படும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்களை ஏவியதாக நடிகர் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது 2 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திலீபை மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், நாளை மாலை 5 மணிவரை போலீஸ் காவலுக்கு அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த இருதினங்களில் திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திலீபை அழைத்துச்சென்று காவல்துறையினர் ஆதாரங்களை திரட்டினர். 2013 ஆம் ஆண்டில் இருந்தே பாவனாவை பழிவாங்க திலிப் முயற்சிகள் மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திலீப் கைதுக்குப்பிறகு முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள நடிகை பாவனா, இந்த வழக்கில் உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.