சினிமா

மீண்டும் மிரட்ட தயாரான ஆன்ட்ரியா - பிசாசு 2 படத்தில் ஒப்பந்தம்

sharpana

மிஷ்கின் இயக்கும் ’பிசாசு 2’ படத்தில் ஆன்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாகா, பிரயாகா, ராதாரவி  நடிப்பில் பிசாசு படம் வெளியானது. பிசாசு என்றாலே பொதுவாக எல்லோரும் பயப்படுவார்கள். பல இயக்குநர்கள் காட்டிய பிசாசுகள் கெட்டதைத்தான் செய்யும். ஆனால், மிஷ்கினின் பிசாசு யாரையும் பயமுறுத்தவில்லை. கெட்டது செய்யவில்லை. மாறாக பரிதாபப்பட வைத்தது. பிசாசாக நடித்த பிரயாகா மீது அன்பை உண்டாக்கியது. பிசாசாக நடித்த பிரயாகா, ஒரு காட்சியே வந்தாலும் மீண்டும் வரமாட்டாரா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு அழகில் கொள்ளைகொள்ள வைத்தார். 

(பிரயாகா)

 எப்போதும் வித்யாசமான கதைக்களத்தில் வித்யாசமான கதாப்பாத்திரங்கள் மூலம் ஈர்ப்பதால் மிஷ்கினுக்கு ரசிகர் கூட்டமே உண்டு. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார்.

அதன்பிறகு, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ என 14 வருடங்களில் குறைவான படங்களே இயக்கியிருந்தாலும் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லருக்காக மிஷ்கின் படங்களுகளை கொண்டாடவும் விமர்சிக்கவும் காத்துக்கொண்டிருகும் திரை விமர்சகர்களும் இருக்கிறார்கள்.

 இந்த ஆண்டு வெளியான சைக்கோ வெற்றிக்குப்பிறகு  மிஷ்கின் விஷாலை வைத்து ’துப்பறிவாளன் 2’ இயக்குவதாக இருந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தை கைவிட்டார். அதன்பிறகு ’பிசாசு 2’ நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குவதாக இருந்தார். ஆனால், ஸ்ருதிஹாசன் தெலுங்கில் பிஸியாக இருப்பதால், இப்போது ஸ்ருதிஹாசனுக்குப் பதில் ஆன்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

 ஏற்கனவே, சுந்தர்சி இயக்கத்தில் ஆன்ட்ரியா பேயாக ‘அரண்மனை’ படத்தில் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிசாசு 2 அன்பை உண்டாக்குகிறதா? பயமுறுத்துகிறதா என்பது படம் வெளியாகும்போது தெரியும்.