சினிமா

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடைகோரி மனு: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

மத மோதலை ஏற்படுத்தும் வகையில் உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க, பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜிஎம்.பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடபட்டது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மை கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடி உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த 15 உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி, மனு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் இன்று (செப்டம்பர் 30) பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.