சினிமா

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

சங்கீதா

திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு பிரிவு தலைவருமான கனல் கண்ணன் இன்று புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மதுரவாயலில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ‘ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் கனல் கண்ணன் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பெயரில் இரண்டுப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவருக்கு சொந்தமான மதுரவாயல், வடபழனி, வளசரவாக்கம் ஆகிய மூன்று இடங்களில் போலீசாரை குவித்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த கனல் கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரியில் இன்று கைதுசெய்துள்ளனர். கனல் கண்ணன் சார்பில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தநிலையில், இன்று கைதாகியுள்ளார்.