Parvathy Director
சினிமா

இயக்குநராக அறிமுகமாகும் நடிகை பார்வதி! | Parvathy Thiruvothu | Director

கோவிட் காலத்தில் படத்தின் திரைக்கதையைக் கொடுத்தபோது என்னை நடிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் என நினைத்தேன். அதனைப் படிக்க கொடுத்தபோது, நீங்கள் இதனை இயக்குவீர்களா என கேட்டார்கள்.`

Johnson

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பார்வதி. இவர் சினிமாவில் நடிக்க துவங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் விரைவில் தான் இயக்குநராக அறிமுகமாக உள்ளதை அறிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் பார்வதி கூறுகையில், "நான் இயக்கும் படம் அருகில் அல்லது தொலைவில் இருக்கிறது எனச் சொல்லலாம். நான் அந்தப் படத்தில் கூடுதல் எழுத்தாளர்தான். ஆனால், அதன் கதையை த்ரிஷா மற்றும் தரானா என்ற இரு சிறப்பான எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். 

Parvathy

கோவிட் காலத்தில் இந்த இருவரையும் நான் சந்தித்தேன். அவர்கள் படத்தின் திரைக்கதையைக் கொடுத்தபோது என்னை நடிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் என நினைத்தேன். அதனைப் படிக்கக் கொடுத்தபோது, ’நீங்கள் இதனை இயக்குவீர்களா’ எனக் கேட்டார்கள். `நீங்கள் விளையாடுகிறீர்களா? நான் ஒரு குறும்படம்கூட எடுத்ததில்லை. எப்படி என்னைக் கேட்கிறீர்கள்' என்று கேட்டேன். `நீங்கள் படித்தால் உங்களுக்கே புரியும்' என்று சொன்னார்கள். நான் படித்த பின்னர், அது ஏன் எனப் புரிந்தது. இந்தப் படம் குறித்து நான் மிக உற்சாகமாக இருக்கிறேன். இதனை வடிவமைக்கும் வேலைகளின் காரணமாகத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகம் படங்களில் நடிக்காமல் இருக்கிறேன்.

இதுதான் என்னுடைய முதல் படமாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். அஞ்சலி மேனனிடம், ’நான் படம் இயக்க விரும்புகிறேன்’ எனக் கூறினேன். `உடனடியாக பானை செய்ய கற்கும் வகுப்பில் சேர்' என்றார். ’எதற்கு’ என நான் கேட்டதும், `ஓர் இயக்குநரின் வேலை என்ன என அது உனக்கு பழக்கும். அதற்கு நீதான் உருவம் கொடுக்கிறாய், ஆனால், அதற்கு என ஒரு வடிவமைப்பு இருக்கும். அதே சமயம், அதை வடிவமைக்காமலும் விட முடியாது. ஒருவேளை, உடைந்தாலும்கூட முதலில் இருந்து துவங்க வேண்டும்' என்றார்.

Parvathy

இதைவிடச் சிறப்பாக இயக்குநரின் பணியை விளக்க முடியாது. ஒரு படம் இயக்குவது என்பதைத் தாண்டி, மக்களிடம் அணுகும் முறை இதில் முக்கியம். அதில் நான் இப்போது நன்கு முன்னேறி இருக்கிறேன். எனவேதான் இப்போது நான் இயக்கத்தை நோக்கி நகர்கிறேன். வெறும் நடிப்பு மட்டும் எனக்கு இப்போது போதுமானதாக இல்லை. எப்படியும் இந்தப் படத்தை செப்டம்பரில் துவங்கி விடுவோம் என நம்புகிறேன். மேலும், இதில் நடிக்காமல் இயக்குநராக மட்டும் பணியாற்றுவேன்" என்றார்.