சினிமா

“என் ராஜினாமாவை விஷால் கண்டுகொள்ளவில்லை” - நடிகர் பார்த்திபன்

webteam

விஷால் தரப்பினரால், தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும்c தெரிவித்துள்ளார். 

சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக நடிகர் பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 என்ற இசைநிகழ்ச்சிக்கு இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தைய நாள் தனது தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பார்த்திபன். ஆனால் இதுகுறித்து எவ்வித காரணமும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார்.

நிகழ்ச்சியின் போது முதலில் நான் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்கிறேன். ஆனால் ரமணா அதை வேண்டாம் என மறுக்கிறார். எல்லோரும் செய்வது போன்று செய்ய வேண்டாம். வித்தியாசமாக செய்யலாம் என்று நான் கூறினேன். அதை ரமணா காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அதன்மூலம் சற்று அவமானப்படுத்தப்படுவது போல் எனக்கு தோன்றியது. இதையடுத்து சில விஷயங்களில் ஓரங்கட்டப்படுவதாக தெரிந்தது.

இதன்மூலம் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன். எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன். என்னுடைய ராஜினாமாவை விஷால் கண்டுகொள்ளவில்லை. என்ன மனவருத்தம் என்று விஷால் கேட்டிக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அந்த நிகழ்ச்சி தெருக்கூத்து போன்று இருந்தது. நடிகர்கள் ரமணா மற்றும் நந்தாவால் நான் அவமதிக்கப்பட்டதால்தான் ராஜினாமா செய்தேன்.” எனத் தெரிவித்தார்.